Wednesday 5 December 2018

நினைவுக் கவிதை

புன்னகை  பூத்த பூ
ஒன்று உதிர்ந்த நாள் /
புரட்சி ஒலி எழுப்பிய குரல்
ஒன்று ஓய்வு பெற்ற நாள் /

கம்பீரம் நிறைந்த
பேச்சாளர்ப் பெண் ஒன்று
மூச்சு நிறுத்திய நாள் /
அரசாண்ட பெண் சிங்கம் ஒன்று
நாற்காலியை விட்டு 
விட்டு பெட்டிக்குள்ளே
அடைக்கலம் புகுந்த நாள்/

மக்கள் திலகத்தை
மனதில் நிறுத்தி
மக்களோடு வலம் வந்த மங்கை
ஒன்று மண் மறைந்த நாள் /

கனத்த மனதுடன் மக்களின்
கண்கள் உப்புக் கண்ணீர் கசியும்
வேளையும் தாமதம் வேண்டாம்
என்று  விரைந்து சென்று உப்புக்கடல் ஓரத்திலே உறங்கிக் கொண்ட நாள் /

பெண்களுக்கு முன்னோடி
பெண்கள் மனதிலே அவள்
எண்ணங்கள் கோடி 
பெண் இனத்தின் நெஞ்சத்திலே
நினைவாக வாருவாள் தினம் தேடி /

அவள் வீரத் தாய் /
அவள் வேங்கையென பாய்ந்த தாய் /
அவள் அணையா நெருப்பாய் /
அவள் அடங்காப்
புயலாய்   உலா வந்த தாய் /

ஆடி அடங்கிய இறுதி நாள் /
உறுதியான மனம் கொண்டு
இறுதி வரை ஆட்சி புரிந்த தாயின்
கண்ணீர் அஞ்சலி நாள் /

மாண்டு ஆண்டு இரண்டு
உருண்டு வந்து விட்டது /
தூற்றியவர்கள்
நாவும் அடங்கி விட்டது /

போற்றியவர்களின்
வாயும் ஓய்வு எடுத்து விட்டது /
இறப்புக்கான காரணம் பிறக்க
இன்னும் ஓர் வழி திறக்கவில்லை /

நான் அக்கட்சி இக்கட்சி
எக்கட்சியும் இல்லை/
துணிச்சல் மிக்க பெண்ணை
நினைத்துப் பார்க்கின்றேன் /

ஜெயாவின் துணிகரத்துக்கு
ஜே போடுவோரில் நானும் ஒருத்தி/
என்பதை மனதில் நிறுத்தி /
அஞ்சலி  செலுத்துகின்றேன் /

ஆத்மா சாந்தி காண பிராத்திப்போம் 😢

   

No comments:

Post a Comment