Wednesday 12 December 2018

மரண வலி

மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மண்ணை விட்டு பிரிந்த
நாட்கள் மறக்க முடியவில்லை.,,..../

மண்ணுக்காக இழந்த
உயிர்களை மறக்க
முடியவில்லை ...../

இளந் தளிர்கள் கருகிய
நாட்கள்  மறக்க முடியவில்லை ..../

தெருவோரம் தெரு நாய்கள்
ஓயாமல் குரைத்த நாட்கள்
மறக்கமுடியவில்லை ..../

வீட்டுக்குள்ளே தூக்கம்
இழந்து தவித்த நாட்கள்
மறக்கமுடியவில்லை .../

தூசி படிந்த குழியில் நீர்
அருந்திய நாட்கள்
மறக்கமுடியவில்லை .../

துக்கம் தொண்டையை
அடைக்கும் போதும்
பயத்தினாலே அடக்கிக்
கொண்டு மறைந்திருந்த
நாட்கள் மறக்கமுடியவில்லை .../

துள்ளிக் குதிக்கும்
இளைஞர்களின்
இறக்கை உடைந்து
ஒடுங்கிப்போன நாட்கள்
மறக்கமுடியவில்லை ..../

சொந்த நாட்டிலே அகதியாக
அழைந்த நாட்கள்
மறக்கமுடியவில்லை ..../

சொகுசான வீடு இழந்து
வவ்வால்  போல்முட்டி
மோதி காட்டுப்பாதை
தேடிய நாட்கள்
மறக்கமுடியவில்லை.../

கஞ்சிக்கும் வழி இல்லையே 
என்று பசியில் அழுத
பிள்ளையைக் கண்டு
அன்னை கலங்கிய நாட்கள்
மறக்க முடியவில்லை ..../

பாசமாக வளர்த்த பிராணிகளை
பாவிங்க பிடித்து உண்ட
நாட்கள் மறக்கமுடியவில்லை ..../

குட்டை பாவாடையையும்
பாடசாலை  உடையையும்
மறைத்து விட்டு சேலை
கட்டி குடும்ப பெண்ணாக
நடித்த நாட்கள் மறக்க
முடியவில்லை ..../

அன்போடும் ஆசையோடும்
உறவினருடனும் நண்பனுடனும்
எடுத்த புகைப்படங்களை
எரித்த நாட்கள்  மறக்கமுடியவில்லை .../

விளையாடும் வயதில்
இல்லறத்தில் கட்டாயத்தின் படி
இணைந்த நாட்கள்
மறக்கமுடியவில்லை ..../

இன்ப துன்பம்  அறியும்
முன்பே விதவை கோலம்
புகுண்டு உலாவுகின்ற அந்த
அவலப்பெண்களின் கண்ணீர்
கதை மறக்கமுடியவில்லை ..../

கை கொடுக்க வருகை
தந்த அரசியல் வாதிகளின்
கபட நாடகத்தை மறக்க
முடியவில்லை ..../

கண்டும் காணாததுபோல்
இருந்த இந்திய அரசை
மறக்கமுடியவில்லை .../

மறந்தும் மறக்க முடியாது
மாண்ட பின்னும் அழிக்க
முடியாத வலி அது ...../

No comments:

Post a Comment