Friday 30 November 2018

எதை தூதாக விட காதலனே


ஓடும் மேகத்தை தூது விடவா ?
தாங்கும் வானத்தை  தூது விடவா?
சிரித்து இருக்கும் நட்சத்திரத்தை  தூது விடவா?
விழித்திருக்கும் நிலவை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

கொட்டும் மழையை தூது விடவா?
தூவும் பனியை தூது விடவா?
மின்னும் மின்னலை தூது விடவா?
இடிக்கும் இடியை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறி விட...\

வளர்ந்து நிற்கும் மரத்தைத் தூது விடவா?
அதில் கூடு கட்டும் காகத்தைத் தூது விடவா?
கூடவே வாழும் குயிலை தூது விடவா?
மரத்துடன் காதல் கொள்ளும் காற்றை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட....\

மலர்ந்த மலரை தூது விடவா?
அதை நாடி வந்த வண்டைத் தூது விடவா?
மறைந்தே இருக்கும் காய்யைத் தூது விடவா?
இனிமை கொடுக்கும் கனியைத் தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறி விட..\

பழத்தை புசிக்க வரும் கிளியை தூது விடவா?
திருடி உண்ண வரும் வவ்வாலை தூது விடவா ?
கடித்து அழிக்க வரும் குரங்கை தூது விடவா?
ஊர்ந்தே திரியும் அணிலை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

படரும் கொடி யை தூது விடவா?
தாங்கிப் பிடிக்கும் கிளை தூது விடவா?
உதிர்ந்த மலரை தூது விடவா?
மிதித்துச்செல்லும் பாதங்களை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறிவிட....\

காலைக்  கதிரவனைத் தூது விடவா?
அவன் முகம் பார்த்து மலரும் கமலத்தை தூது விடவா?
கூவும் சேவலை தூது விடவா?
கீச்சிடும் பறவைகளை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட.\

கட்டி அணைக்கும் தலையணையை தூது விடவா?
எனக்கு அழகு மெருகூட்டும் பொருட்களை தூதுவிடவா?
நித்தமும் முத்தம் கொடுக்கும் உன் புகைப்படத்தை தூது விடவா?
தினம் தினம் முகம் பார்க்கும் கண்ணாடியை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

என் இதயத் துடிப்பை தூண்டியே தூது விடவா?
என் மனதின் தவிப்பையும் தூதுவிடவா?
விழியின் காத்திருப்புக்களையும் தூது விடவா?
என் இதழ் புன்னகையோடு தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறிவிட....\

என் புலம்பல் கேட்கும் அறையின் ஒளியை தூது விடவா?
தவறாமல் வரம் கேட்கும் அம்மனைத் தூது விடவா?
ஓயாமல் நான் இசைக்கும் காதல் கீதங்களை தூதாக விடவா?
ஒவ்வெரு நாளும் நான் அனுப்பும் குறுஞ்செய்தியும் தூதாகவே விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட.....\

இத்தனை தூதுகள் தேவையில்லையடா/
நான் உன்னிடம் கொண்ட உரிமையும்/
நான் காட்டும்  அன்பும்/
என் குறும்பு பேச்சுமே போதுமடா/
நான் உன்னை நேசிப்பதை நீ அறிந்துவிட /

சிங்காரச் சென்னைக்கு நீ சென்றாலும்/
பேசும் சித்திரமாய் நான் இருப்பதை/
நித்திரையிலும் மறவாதேடா....\

ஆர்  எஸ்  கலா(2014 ஆர்வமாய் ரசித்து எழுதிய கவிதை 😃)

No comments:

Post a Comment