Saturday 16 July 2022

காலம் கடந்த பின்  ஞானம்
****************************

ஆதரவு கொடுத்தவனே
அருவாள் தூக்குகின்றான்.
ஓட்டுப் போட்டவனே 
ஓட்டம் காட்டுகின்றான்.

தேர்வு செய்து வாழ்த்து
உரைத்தவனே 
கோத்தா கோ என்று 
உரக்கக் கோசம் போடுகின்றான்.

மகிந்தைக்கு நெஞ்சத்தில்
மாளிகை கட்டியவனே
அரளி மாளிகையை விட்டு
ஓட ஓட விரட்டுகின்றான் .

அவர்கள் விதைத்த 
வினையே விளைந்து விட்டது 
அவர்களது விரல்களே
அவர்களின் விழிகளை 
பதம் பார்க்கின்றது.

நாட்டை வித்தவர்களின் 
மூளையை நொங்கு குடித்திட 
ஆங்காங்கே படை திரண்டு விட்டது.

என்ன ஓர் விசித்திரம்
எந்த மாதத்தில்  
தமிழ் இனம் அழிக்கப் பட்டு 
வெற்றிக் கொடி நட்டானோ 
அதே மாதத்தில் 
அவனுக்கான எதிர்ப்புக்
 கொடி விரிக்கப் பட்டு விட்டது.

தமிழினம் அழியும் போது 
குமுறாத உள்ளங்கள் எல்லாம் 
எழுந்து  கொந்தளிக்கின்றது.
திக்கட்டுப் போய் தெருவினிலே நின்று தவிக்கின்றது. 

இன்று சிங்கள மொழி 
உரைத்திடும் நாவிலும் 
இறந்தும் இறாவாமல் 
வாழ்ந்திடும் ஈழச்சுடரின் 
புகழ் ஒலிக்கின்றது.

காலம் கடந்து ஞானம்
பிறந்தவர்களாய்
சிறு பான்மையினரை 
வதைத்ததை நினைத்து  வருந்துகின்றார்கள்.

No comments:

Post a Comment