உலக அழகி என்று சொல்ல முடியாது
ஆனால் அவள் அழகிதான்.
அவள் விழியழகி,
அவள் முடி அழகி,
அவள் கொவ்வை இதழ் அழகி.
கொழுகொழு கன்னம் கொண்டாள்,
அரைத்த செம்பசந்தன நிற உடல் கொண்டாள்,
அவளே ஒரு இயற்கை வர்ணப் படைப்பு போல அழகி.
கடலிலிருந்து எட்டிப் பார்க்கும்
கதிரவன் போல்
காந்தமான மதி அழகி அவள்.
அழகை அள்ளிக் கொடுத்த இறைவன்
மொழியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்று
மனம் வியக்கும் அளவுக்கு
மொழியிழந்த பொம்மை போன்ற அழகி அவள்.
இதயத்தில் ஆயிரம் ஆசைகள்,
பல்லாயிரம் கற்பனைகள் விதையாக விழுந்து,
காதல் மலராக மலர்ந்து
மரமாக வளர்ந்தது அவளுள்.
வெளியில் சொல்ல முடியாமல்
அவள் அவனுக்கு
எத்தனையோ செல்லப் பெயர்கள் சூட்டினாள்
தன் மனதிற்குள் மட்டும்.
காதலை கூற முடியாமல்
தினமும் கண்களால் மட்டும்
அவனை காதலித்தாள் அந்தப் பெண்.
இது அவள் புகட்டாத காதல்,
அவனுக்குப் புரியாத காதல்.
நாட்கள் நகர்ந்தன…
காதல் மட்டும் மனதில் வளர்ந்தது.
ஒருநாள் வீட்டிற்கு வந்த அழைப்பிதழ்
அவள் கண்களில் பட்டது.
அவள் அவனுக்காக சூட்டிய
செல்லப் பெயர்கள் எல்லாம் மறைந்து,
அவனின் சொந்தப் பெயருடன்
திருமண அட்டை இருந்தது.
ஓவென ஒப்பாரி வைத்து அழ முடியாத நிலை.
விழிகள் மட்டும் குளம் போல நீராடின.
ஊமைப் பெண்ணின் காதல் அது…
வெளியில் சொல்ல முடியாத வேதனை.
தீர்க்க வழியும் தெரியவில்லை.
அவள் தினமும் அவனைப் பார்க்கும்
மரத்தடியில் நின்று
அவன் நினைவில் மூழ்கிய நேரம்…
எங்கிருந்தோ ஒரு பாடல் ஒலித்தது.
“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமிது
கடவுள் செய்த குற்றமிது…”
பாடலை செவிமடுத்தவள்
தன் மனதை தேற்றிக் கொள்ள முயன்றாள்.
ஆனால் முடியவில்லை.
வாய் மலர்ந்து வாழ்த்த முடியாதாலும்
மனதில் வாழ்த்தி விட்டு
மெதுவாக நகர்ந்தாள் அவள்.
ஊமைப் பெண்ணின் காதலும்
அங்கேயே ஊமையாகிப் போனது.
No comments:
Post a Comment