Saturday 9 January 2021

மின்சாரக் கண்ணா



வெட்டருவாள் எதற்குடா
பெண் மனதை வெட்டி  வீழ்த்த 
உன் விழி இருக்கையிலே .....!

சுட்டெரிக்கும் சொல் 
இல்லை உன்னிடம்  
சுண்டி இழுக்கும் சுடர் நீயடா .......!

கட்டெறும்பாக ஊருவதோ 
உன் நினைவடா 
நெஞ்சினிலே கட்டழகன் உன் உருவச்சிலையடா .....!

ஆழமான பாசக் 
காரன்   நீயடா.
அழுத்தமன 
மனசுக்காரனும் நீதானடா.....!

சாதிக்கத் துடிப்பதோ 
உன் உள்ளமடா  .
சாதி என்னும்  
கூண்டுக்குள்ளே  -நீ 
அடைபட்ட சிங்கமடா .....!

வெட்கத்தை எப்படியோ 
அழைத்து விட்டு விட்டாய் 
என்னிடம் -நீ பக்கம் அமராமலே 
ஏன்! என பதில் கூறடா ....!

உன் இதழ் உருட்டி விடும் 
மெல்லிய புன்னகையில் 
குளிர்ந்து போனது 
என் நாணமடா ......!

காமம் கொண்டு 
நீ நெருங்கையிலே 
கட்டிலும் தாங்கிடுமோ 
என்னும் அச்சம் கண் 
விழிக்கத்தான் செய்யுதடா .......!

கனவில் மட்டும் கண்ணா 
நீ  கண்ணடிக்கிறாய்  
அதனாலே  கண்ணீரில் 
மிதப்பதோ நானடா .........!

காலம் கனியுமா உன் 
இனிய அன்பு கிடைக்குமா ?  
உன் தேக்க மர உடம்பு 
திகட்டிடுமோ எனக்கு சொல்லடா .......!

நீ வேம்பாகக் கசப்பாயோ 
இல்லை கரும்பாக இனிப்பாயோ.
பலாச்சுளை போல் சுவை கொடுப்பாயோ  நான் அறியேன் கள்வனே உள்ளம் கொள்ளை போனது உன்னிடம்  
என்பதோ  உண்மையடா .....!

தாடிக்கும் விடுதலை கொடு 
தாவணிக்கும் விடுதலை கொடு 
உன்னை நெருங்கும் சல்வார் 
பெண்ணுக்கும் விடுதலை கொடு.
என் தடிப்பான நெஞ்சத்திலே 
இருட்டான இதயறையிலே 
 துடிப்பாக நீயடா தினம் தினம் 
துடிப்பதோ அதில் உன் நினைவடா .......!


No comments:

Post a Comment