Wednesday 12 October 2022

உள்ளக்   கதவினை  
திறந்து வைத்தேன்
*********************.
**********************.
ஓடும் குருதியில் 
உனது பெயரை நிறுத்தி/
பிறக்கும் சுவாசத்திலும் 
அதே பெயரைக் கிறுக்கி /

தும்மலுக்குள்ளே கம்மியாய் 
அழைப்பிதழைத் திணித்து /
காற்றோடு உன்னுள்ளே 
ஊடுருவிக் கொடுத்திட வலியுறுத்தி /

விரித்த பாயோடும் 
சிரித்த முகத்தோடும்/
இரவெல்லாம் காத்திருக்கேன் /
உனது வரவுக்காகப் பூத்திருக்கேன்/

உதய வானை நோக்கி இருக்கேன் /
ஒவ்வொரு நட்சத்திரமாக 
எண்ணிக்கையிலே கோர்த்திருக்கேன் /
விழித்திருக்கும் வெண்ணிலவிடம் 
ரகசியம் உரைத்திருக்கேன்/
ராத்திரி தாமரையாக ஒத்தையில் 
உனைக் காண  மலந்திருக்கேன் /

ஆலோலம் பாடிடும் குயிலும்
கிளியும் கூண்டுக்குள் போயாச்சு /
ஆராரோ பாடிடும் பக்கத்து வீட்டுத் 
தாயும் மழலையோடு தூங்கியாச்சு /
தெருவோர நாய்களும் ஒட்டுக் 
கடைக்குள்ளே சுருண்டாச்சு/

இதமான காற்றும்  அசைந்து 
முருங்கைப் பூக் கொட்டி வாழ்த்தியாச்சு/
பனிக் குளிரும் என்னை நெருங்கியாச்சு /
உமக்காக. இதயத்  தவிப்பும் பெருக்காச்சு/

தேக்கமாச்சு என்னுள்ளே ஏக்கம் /
தாக்கிடாதே வார்த்தையினாலே/
பார்க்கா விட்டால் நிறைவாகிடும் துக்கம் /
படியேறி நீவா  உள்ளக் கதவினை 
திறந்து வைத்தேன் /
  
ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment